பதிவு செய்த நாள்
21
மே
2025
03:05
சூலூர்; சூலூர் அருகே பள்ளபாளையத்தில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடந்தது.
சூலூர் அடுத்த பள்ளபாளையத்தில் உள்ள மகாலட்சுமி கோவில் பழமையானது. இங்கு இரண்டாம் ஆண்டு விழாவும், நேர்த்திக்கடன் வழிபாடு நடந்தது. முன்னதாக, மகாலட்சுமி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில், பூஜிக்கப்பட்ட தேங்காய்களை பூஜாரி உடைத்து வழிபாடு நடத்தினார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்," 21 நாட்கள் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து கொள்வதால், தீவினைகள் அகன்று நன்மை உண்டாகும் என்பது ஐதீகம். இரண்டாம் ஆண்டாக நடக்கும் விழாவில், 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினோம், என்றனர்.