எழுமலை; எழுமலை அருகே எ.கோட்டைப்பட்டி கிராமத்தில் ராமலிங்க சவுண்டேஸ்வரி அம்மன் கோயில் வைகாசி மாத கரகமெடுப்பு பொங்கல் விழா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கரகம் எடுத்து சக்தி மாவு நிறுத்துதல் நிகழ்ச்சி இன்று காலை 8.00 மணியளவில் துவங்கியது. எ.கோட்டைப்பட்டி கோயிலில் இருந்து ஊர்வலமாக 2 கி.மீ., தூரத்தில் உள்ள உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, கரகம் உருவேற்றி, சக்தி மாவு நிறுத்தினர். தொடர்ந்து, கரகத்தை கோயில் பூசாரி தலையில் சுமந்து கைகளால் தொடாமல், கோயிலுக்கு வரும் வழியில் துர் தேவதைகளை விரட்டும் வகையில் பக்தர்கள் கத்தி போட்டு அம்மன் கரகத்தை வழிநடத்தி வந்தனர் . ஓம் சக்தி, பராசக்தி, வா தாயே வா என்ற கோசங்களுடன் அம்மன் கரகத்தை அழைத்து வந்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். சவுண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இரவில் மாவிளக்கு, முளைப்பாரி, நாளை மே 28ல், பொங்கலிட்டு படையல் வைத்து வழிபாடு, மே 29 ல், கரகம் முளைப்பாரி கரைத்தல், இரவில் அம்மன் பூபல்லக்கில் நகர்வலம் வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.