பதிவு செய்த நாள்
15
டிச
2012
10:12
இறைவனின் இரக்கத்தை நிறைவாக பெறவேண்டும் என்ற எண்ணமும், ஏக்கமும் ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது. இறைகுலத்திற்கு சொந்தமானவர்கள், தங்களின் வாழ்க்கையை நிலைகுலையாமல் எதிர்கொள்ளவே திருச்சபை தோற்றுவிக்கப்பட்டது. இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் செயல்படும்போது, பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனோதைரியம் கிடைத்து விடும்.
நமது எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் இருந்தாலும் கூட, முயற்சியில் முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்கும். வழிநடத்துவதற்கும், கைதூக்கி விடுவதற்கும், ஆலோசனை அளிப்பதற்கும் நம் நலனில் அக்கறை கொண்ட ஒருவர், ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறார்.இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, மனிதராக அவதரித்த இயேசு, மக்களின் மத்தியில் நின்று கொண்டு ""மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்து விட்டது என்ற வார்த்தையை தனது முதல் போதனையாக வெளிப்படுத்தினார்.
புனித மத்தேயு தனது நற்செய்தியில்,""கலிலேயா முழுவதும் சுற்றி வந்த இயேசு, நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தினார் என்கிறார். பிறருக்கு உதவும்போதெல்லாம், இறைவனின் இரக்கத்திற்குஉரியவர்களாகிறோம் என்பதை நாம் உணரவேண்டும்.