பதிவு செய்த நாள்
29
மே
2025
05:05
புதுச்சேரி; ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமியின் 188ம் ஆண்டு குருபூஜை பெருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
புதுச்சேரி, கருவடிக்குப்பத்தில் ஜீவசமாதி அடைந்து அருள்பாலித்து வரும் குரு சித்தானந்த சுவாமியின் 188ம் ஆண்டு குருபூஜை பெருவிழா இன்று நடைபெற்றது. அதனையொட்டி, நேற்று மாலை கலச பிரதிஷ்டை செய்து, கணபதி ஹோமம் நடைபெற்றது. இரவு பூர்ணாஹூதி நடைபெற்றது. இன்று காலை கணபதி ஹோமம், நவகக்கிரக ஹோமம், ருத்ர ஜபத்தை தொடர்ந்து ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி குருபூஜை அபிஷேகக்குழு சார்பில், சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பூர்ணாஹூதியை தொடர்ந்து கலசம் புறப்படாகி காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர்கள் மற்றும் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு, வெள்ளி கவசத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குருபூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுவாமிக்கு தீபாராதனை, இரவு அர்த்த ஜாம பூஜை நடைபெற்றது. குருபூஜையையொட்டி நேற்று மாலையும், இன்று காலை முதல் மாலை வரை மங்கள இசை, ஆன்மிக சொற்பொழிவு, திருவாசகம் முற்றோதல், பக்தி இசைகச்சேரிகள் நடைபெற்றது.