சூலுார்; நாகமநாயக்கன் பாளையம் ஸ்ரீ காளியப்ப மசராய பெருமாள் கோவில் உற்சவ திருவிழா பக்தி பரவசத்துடன் நடந்தது. பட்டணம் – பீடம்பள்ளி ரோடு, நாகமநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ காளியப்ப மசராய பெருமாள் கோவில் பழமையானது. கோவில் உற்சவத்திருவிழா, கடந்த, 22ம் தேதி மாலை, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் பெருமாளுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. மே 27 ல் அம்மன் அழைத்தல், சுவாமி ஆற்றுக்கு செல்லும் வழிபாடுகள் நடந்தன. நேற்று மதியம் உற்சவருக்கு புனித ஸ்தலங்களின் தீர்த்த அபிஷேகம் நடந்தது. அலங்கார பூஜைக்கு பின், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் வழிபாடும், மாவிளக்கு பூஜையும் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.