ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி ஒன்றியம் மரிக்குண்டு கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. மூன்று நாட்கள் நடந்த விழாவில் முதல் நாளில் முத்தாலம்மனுக்கு சிலை செய்து மேளதாளம், தேவராட்டத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றனர். முத்தாலம்மனுக்கு அலங்காரம் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2ம் நாளில் அம்மனுக்கு விளவக்கூடை எடுத்து வரும் நிகழ்ச்சியும், பக்தர்கள் வேஷமிட்டு தேவராட்டம், கும்மி ஆட்டத்துடன் தீச்சட்டி, பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராம வழக்கப்படி நாட்டு மாடுகளுக்கு கோயில் வளாகத்தில் மரியாதை செய்து தம்பிரான் ஓட்டம் நடத்தினர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 3ம் நாளில் சிறப்பு பூஜை வழிபாடுகளுக்கு பின் முத்தாலம்மன் பூஞ்சோலை அடைந்தது. அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.