பதிவு செய்த நாள்
31
மே
2025
03:05
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன் 8ல் தேரோட்டமும், ஜூன் 9 ல் தெப்பமும் நடைபெறும்.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். நேற்று முன்தினம் மாலை திருநாள் மண்டபம் முன்பாக சிவாச்சார்யார்களால் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், ரிஷபம் கொடிபடம் திருவீதி வலம் வந்தது. தொடர்ந்து கொடி மரம் அருகில் ஐம்பெரும் கடவுளர்கள் எழுந்தருள தீபாராதனை நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கும், அஸ்திரத் தேவருக்கும் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிவாச்சார்யார்களால் கொடியேற்றப்பட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. கொடி மரத்திற்கும் சிவாச்சார்யார்களுக்கும் காப்புக் கட்டப்பட்டது. ஐம்பெரும் கடவுளர் திருநாள் மண்டபம் எழுந்தருளினார். இரவில் அம்மன் சன்னதி முன் வில்வமரம் மற்றும் கடவுளர்களுக்கு காப்புக்கட்டி விழா துவங்கியது. முதல் நாளில் திருப்புத்துார் வட்டார நாயுடு மகாஜன சங்கம் மண்டகப்படி தீபாராதனை நடந்தது. சூரியன்,சந்திரன் பிறைகளில் சுவாமி,அம்பாள் தேரோடும் வீதிகளில் உலா வந்தனர். தொடர்ந்து தினசரி இரவு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். இன்று திருப்புத்துார் வட்டார யாதவர் சங்கம் சார்பில் மண்டகப்படி தீபாராதனை நடைபெறும். புதிய வாகனங்களான கற்பக விருட்சம், காமதேனு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஜூன் 3 காலையில் சுவாமிக்கு மந்திரநீர் முழுக்காட்டு தீபாராதனையும், ஜூன்4ல் திருக்கல்யாணம், ஜூன் 7 காலையில் நடராஜர் புறப்பாடும், ஜூன் 8 ல் தேரோட்டமும், 9 ல் தெப்பமும் நடைபெறும்.