காஞ்சிபுரம் அஷ்டபுஜர் கோவில் குளத்தில் துார்வாரும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2025 03:05
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவில் குளம், கடந்தாண்டு பிப்., 26ம் தேதி நடந்த கும்பாபிஷேகத்தின்போது சீரமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்தில் தேங்கியுள்ள நீர் பாசி படர்ந்து பச்சை நிறமாக மாறியதோடு, செடி, கொடிகள் வளர்ந்து சீரழிந்த நிலையில் இருந்தது. எனவே, இக்குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கோவில் குளம் துார்வாரும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம் ஆகியோர் கூறியதாவது: அஷ்டபுஜ பெருமாள் கோவில் குளத்தை சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையில், கஜேந்திர புஷ்கரணி என அழைக்கப்படும் இக்குளம் துார்வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள் துார்வாரும் பணி முடிக்கப்படும். மேலும், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய்களும் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.