பதிவு செய்த நாள்
05
ஜூன்
2025
12:06
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை ஆனந்தவல்லி தாயாருடன் சந்திரசேகரரும், ஸ்ரீ தேவி பூதேவியுடன் வீரராகவப்பெருமாளும் திருவீதியுலா வந்து அருள்பாலித்தனர்.
மதியம், சோமாஸ்கந்தர் மற்றும் விசாலாட்சியம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. மாலையில், சோமாஸ்கந்தர் பூத வாகனத்திலும், விசாலாட்சியம்மன் அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளினர். ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப்பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். முக்கிய நிகழ்வாக, 7ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற உள்ளது. கொங்கு குலால உடையார் அறக்கட்டளை சார்பில், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சிகள், ஸ்ரீகருட வாகன புறப்பாடு நடந்து வருகிறது. இதுவரை, பேரூர், பவானி பகுதிகளில் இருந்து, 63 நாயன்மார் உற்சவ திருமேனிகள் எடுத்துவந்து பயன்படுத்தப்பட்டது. தற்போது, கொங்கு குலால உடையார் அறக்கட்டளை சார்பில், 63 நாயன்மார் பஞ்சலோக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாளை, குலாலர் பிள்ளையார் கோவிலில், 63 நாயன்மார் சிலைகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 7ம் தேதி காலை, பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், மாலையில் அலங்காரபூஜையும் நடக்கிறது. அப்போது, குலாலர் பிள்ளையார் கோவிலில் இருந்து, 63 நாயன்மார்களை ஊர்வலமாக அழைத்துச்சென்று, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சமூர்த்திகள் புறப்பாட்டை தொடர்ந்து, 8ம் தேதி சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, 9ம் தேதி காலை, உற்சவமூர்த்திகள் ரதோற்சவமும், மாலையில் சோமாஸ்கந்தர் தேரோட்டமும், 10ம் தேதி மாலை, ஸ்ரீவீரராகவப்பெருமாள் தேரோட்டமும் நடைபெற உள்ளது.