திருக்கோஷ்டியூரில் கஜேந்திர யானைக்கு மோட்சம் அளித்த பெருமாள்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2025 10:06
திருப்பத்தூர்; சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான புராண சிறப்பு மிக்க ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள்கோவிலில் கஜேந்திர மோட்ச விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோவில் அருகே உள்ள கருவேல்குறிச்சி மணிமுத்தாறு ஆற்றில் ஆண்டுதோறும் வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு கஜேந்திர யானைக்கு பெருமாள் மோட்சம் அளித்த புராணத்தை விளக்கும் கஜேந்திர மோட்சம் என்னும் விழா நடைபெற்று வருகிறது.
அகஸ்திய முனிவரின் சாபத்தால் கஜேந்திர யானையாக சாபம் பெற்ற மன்னனும், முனிவரிடம் முதலையாக சாபம் பெற்ற கந்தர்வனுக்கும் ஸ்ரீ விஷ்ணு சக்கராயுதத்தால் சாப விமோசனம் அருளினார். விழாவை முன்னிட்டு, முன்னதாக உற்சவர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்தில் பெரிய திருவடியான கருட வாகனத்தில் ஆடும் பல்லக்கில் கோயிலிலிருந்து புறப்பாடாகி மணிமுத்தாறு ஆற்றின் அருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து மணிமுத்தாற்றில் பெருமாள் எழுந்தருளினார். பின்னர் கோவில் யானை வரவழைக்கப்பட்டு கஜேந்திர மோட்ச பூஜையை பட்டாச்சாரியார்கள் நடத்தினர். அப்போது கஜேந்திர யானை ஆற்றுக்குள் இருந்து மூன்று முறை பிளிறியது. அப்போது பெருமாளின் சந்தனம் மற்றும் சடாரி யானைக்கு சாத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடியிருந்த பக்தர்கள் மீது யானை தண்ணீர் பீச்சி அடித்தது. நிறைவாக சௌமிய நாராயண பெருமாள் சுவாமியை யானை வணங்கி மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுக்கும் மோட்சம் கிடைக்க வேண்டி வழிபாடு செய்தனர். தொடர்ந்து மண்டபத்தில் ஆடும் பல்லக்கில் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளினார். விழா ஏற்பாடுகளை கருவில் குறிச்சி கிராமத்தாகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.