குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய வரதராஜ பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2025 11:06
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள்வசந்த உற்ஸவ விழாவில் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கி தொடர்ந்து குதிரை வாகனத்தில் கோலாகலமாக நகர் முழுவதும் வலம் வந்தார்.
எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் கோயில் 118வது வசந்தோற்ஸவவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் காலை ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாளுக்கு கும்பத் திருமஞ்சனம் நடந்தது. நாள் முழுவதும் பக்தர்கள் மாவிளக்கு வைத்து வழிபட்டனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில்பூ பல்லக்கில் அமர்ந்தார். பின்னர் கருப்பண்ணசுவாமியிடம் விடை பெற்று காலை 5:40 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து குதிரை வாகனத்தில் பெருமாள் அலங்காரமாகி மதியம் அனுமார் கோயிலில் விடையாற்றும்உற்ஸவம் நடந்தது. அப்போது பெரிய பஜார் வழியாக சென்று வைகை ஆற்றில் மாலை திருச்சப்பரத்தில் சேவை சாதித்தார். இரவு முழுவதும் கோலாகலமாக நகர்வலம் சென்ற பெருமாள் வண்டியூரை அடைந்தார். இன்று மாலை சேஷ வாகனத்தில் அலங்காரமாகி இரவு வைகை ஆற்றில் மண்டூக மகரிஷிக்கு காட்சியளிப்பார். தொடர்ந்து இரவு முழுவதும் அவதார சேவையில் அருள் பாலிக்க உள்ளார். பின்னர் கருட மற்றும் அனுமார் வாகனங்களில் உலா வந்து, ஜூன் 15 மாலை மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகி நகர் உலா வருவார். ஜூன் 16 காலை 9:00 மணிக்கு மேல் கோயிலை அடைந்ததும் இரவு கண்ணாடி சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.