பதிவு செய்த நாள்
13
ஜூன்
2025
10:06
தஞ்சாவூர்; திருச்சி சரக இந்திய தொல்லியல்துறை சார்பில், தஞ்சாவூர் பெரியகோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் குறித்த தகவல்கள் எழுத்து மற்றும் ஆடியோ வடிவிலும், புகைப்படம், 3டி விர்சுவல் டூர் – முப்பரிமாண மெய்நிகர் சுற்றுலா, போன்ற வசதிகள் கொண்ட இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவிலில் உள்ள க்யூ.ஆர்., குறியீடை கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியர் ஸ்கேன் செய்தால், மொபைலில் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இந்த க்யூ.ஆர்., குறியீடு தஞ்சாவூர் பெரியகோவிலில் ராஜராஜன் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றுலா பயணியர் ஸ்கேன் செய்து பார்வையிட்டனர்.
தொல்லியல் அதிகாரிகள் கூறியதாவது: திருச்சி சரக இந்திய தொல்லியல்துறை சார்பில், தஞ்சாவூர் பெரியகோவில், தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம், கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் சித்தனவாசல், கொடும்பாளூர் மூவர் கோவில், திருமயம் கோட்டை, திண்டுக்கல் கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் திருமலைநாயக்கர் அரண்மனை ஆகிய பகுதிகளில் க்யூ.ஆர்., குறியீடு சிஸ்டம் வைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வரலாறு, அமைப்புகள் குறித்து சுற்றுலா பயணியர் அறிந்துக்கொள்ள முடியும். மேலும் ஆடியோ வடிவிலும் கேட்க முடியும். முதற்கட்டமாக ஆங்கிலத்தில் தகவல் உள்ளன. வரும் காலங்களில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கொண்டு வர பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.