பழநி, கிழக்கு ரதவீதி, பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடி கட்டி மண்டபத்தில் வசந்த உற்ஸவமான வைகாசி விசாக விழா ஜூன் 3ல் துவங்கியது. விழா நாட்களில் தந்த பல்லாக்கு, தங்கமயில், காமதேனு, ஆட்டுக்கடா, தங்க குதிரை, வெள்ளி யானை, வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. ஜூன் 8ல் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஜூன் 9, மாலை 4:30 மணிக்கு துவங்கி வைகாசி விசாக தேரோட்டம் ரதவீதிகளில் நடந்தது. நேற்று (ஜூன் 12ல்) காலை 11:00 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் தெய்வானை கோயிலுக்குள் சென்றபின் கோயில் நடையை அடைத்தனர். அதன்பின் ஓதுவார் சிவ நாகராஜன் பாடல்கள் பாடி திருஊடல் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். அதன் பின் கோயில் நடை திறந்து வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின் இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைய உள்ளது. விசாக விழா கலை நிகழ்ச்சிகள் கோயில் மண்டபத்தில் நடைபெற்றன.