சபரிமலை; ஆனி மாத பூஜைக்காக இன்று (ஜூன் 14) பிரசித்தி பெற்ற சபரிமலை நடை திறக்கப்படுகிறது. ஜூன் 19ம் தேதி வரை மாதாந்திர பூஜைகள் நடக்கும்.
இன்று (14.06.25) மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு , கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து யோக நித்திரையில் இருக்கும் ஐயப்பனுக்கு தீபம் காட்டி கற்பூர ஆழியில் தீபம் ஏற்றுகிறார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். நாளை ஜூன் 15ம் தேதி முதல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10.30 மணி வரை, நிர்மால்ய பூஜை, கணபதி ஹோமம், களபாபிஷேகம், படி பூஜைகள் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடக்கின்றன. மாதாந்திர பூஜைகளுக்குப் பின் ஜூன் 19ம் தேதி இரவு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். பக்தர்கள், தரிசனத்திற்கு sabarimalaonline.org.in முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.