திருப்பரங்குன்றத்தில் லட்சுமி தீர்த்த குளத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2025 03:06
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான லட்சுமி தீர்த்த குளத்தில் (திருக்குளம்) ரூ. 6.50 கோடியில் நடந்த சீரமைப்பு பணிகள் நேற்று நிறைவடைந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் லட்சுமி தீர்த்த குளத்தின் உள்பகுதியில் 4 மூலைகளிலும் இருந்த கருங்கல் சுவர்கள் இடிந்து விழுந்தது. அக்குளம் பழமை மாறாமல், ஏற்கனவே இருந்த கருங்கற்கள் கொண்டு சீரமைப்பு பணிகளும், வடக்கு பகுதிகளில் சிமென்ட் கான்கிரீட் சுவர் அமைத்து அதன் உள்பகுதியில் கருங்கற்கள் ஒட்டும் பணி நிறைவடைந்தது. அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா ஆலோசனையின் படி, புதிதாக திருக்குளத்தின் உட்பகுதியை சுற்றிலும் நான்கு அடி உயரத்திற்கு சிமென்ட் தூண்களும் அதன்மேல் பகுதியில் சுதை வேலைகளும், இடைப்பட்ட பகுதிகளில் இரும்பு கேட்டுகளும் அமைக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது. குளத்தின் மேற்குப் பகுதியில் முன்பு இருந்த மரங்களின் வேர்களால் சுவர்கள் இடிந்து விழுந்தன. அப்பகுதியில் மீண்டும் மரங்கள் வளர்ந்து குளத்திற்கு மீண்டும் சேதம் ஏற்படாத வகையில் குளத்தைச் சுற்றிலும் மேல்பகுதியில் நான்கு மீட்டர் அகலத்திற்கு கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. திருக்குளம் என்ற பெயருக்கு ஏற்றார் போல் குளம் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. குளத்தின் மையப் பகுதியில் முன்பு கருங்கல்பீடமும் அதில் மின் விளக்கும் பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது லட்சுமி தீர்த்த குளத்தின் பெயருக்கு ஏற்றார் போல் மையப் பகுதியில் கருங்கல் பீடம் அமைக்கப்பட்டு அமர்ந்த நிலையில் லட்சுமியின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. கோடை காலங்களில் குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்காக ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது.