பதிவு செய்த நாள்
30
ஜூன்
2025
02:06
மயிலாடுதுறை; திருவெண்காடில் வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோயில் உள்ளது. இங்கு மூர்த்தி, தீர்த்தம், தல விருட்சம் ஆகியன மூன்றாக அமையப் பெற்றதும், தேவாரப் பாடல் பெற்றதுமான இது நவகிரகங்களில் புதன் பகவானுக்கு உரிய தலமாக போற்றப்படுகிறது. காசிக்கு இணையான சிவ தலங்களுல் முதன்மையாக விளங்குகிறது. ஆதி சிதம்பரம் என போற்றப்படும் இங்கு சிவபெருமானின் அம்சமான அகோர மூர்த்தி, நடராஜ பெருமான் தனி தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர்.
பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததுமான இத்தளத்தில் சுவாமி, அம்பாளை வழிபட்டால் சிறந்த ஞானமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்து தமிழக அரசு ஒதுக்கிய நிதி ரூ.2 கோடியே 5 லட்சம் மற்றும் நன்கொடையாளர்கள் அளித்த நிதி ரூ.25 கோடி நிதி ஆகியவற்றை கொண்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு வரும் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. இதற்காக சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி சன்னதியில் சிறப்பு யாக குண்டம் அமைக்கப்பட்டு தேவதா அனுக்ஞை, எஜமான் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை நவகிரக ஹோமம் மற்றும் லட்சுமி ஹோமம் நடைபெறுகிறது பூஜைகளை கோவில் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் தலைமையிலானோர் செய்திருந்தனர்