கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2025 03:06
தேவகோட்டை; கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் திருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் சொர்ணமூர்த்தீஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஆனித் திருவிழா மாம்பழத் திருவிழாவாக நடைபெறும். இக்கோயில் தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுப்பது, புதுத் தேர் வெள்ளோட்டம் என சில காரணங்களால் அவ்வப்போது ஆனித் திருவிழா நடைபெறவில்லை. சில ஆண்டுகள் திருவிழா நடந்தது. தேருக்கு பதில் சப்பரபவனி நடந்தது. இந்நிலையில் இந்தாண்டு ஆனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிவன் படம் வரையப்பட்ட திருவிழாக் கொடி மேளதாளத்துடன் கோயில் மற்றும் ஊருணி உட்பட தேரோடும் வீதியில் வலம் வந்தது . கோயிலில் கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. திருமூலநாதன் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்தார். சமஸ்தானத்தின் கோயில் கண்காணிப்பாளர் சரவணன் உட்பட நான்கு நாட்டைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். டி.எஸ். பி. கவுதம் , இன்ஸ்பெக்டர் சரவணன், தாசில்தார் சேதுநம்பு, பங்கேற்றனர். முதல் நாளான இன்று கேடக வாகனத்திலும் மற்ற நாட்களில் சிறப்பு வாகனங்களில் சொர்ண மூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன் உட்பட பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருவர். ஐந்தாம் நாள் திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் சொர்ண மூர்த்தீஸ்வரர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தை சிறப்பாக நடத்துவது பற்றியும், மரியாதை தொடர்பாகவும் நான்கு நாட்டைச் சேர்ந்த மக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேவகோட்டை மற்றும் கண்டதேவிக்குள் வரும் வழிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.