மானாமதுரை; மானாமதுரை அருகே மேலநெட்டூரில் சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட சொர்ணவாரீஸ்வரர், சாந்தநாயகி அம்மன் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று தேரோட்ட விழாவிற்காக கோயில் முன்இருந்த பெரிய தேரில் சொர்ண வாரீஸ்வரரும், சிறிய தேரில் சாந்தநாயகி அம்மனும் எழுந்தருளினர். தேர்களுக்கு முன்பு விநாயகரும், பின்பு வள்ளி, தெய்வானையுடன் முருகனும் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து மேலநெட்டூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தேரை இழுந்தனர். தேர் நிலையை அடைந்தவுடன் விளை நிலங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் தேங்காய் உள்ளிட்டவற்றை சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.