ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழா; ஜூலை 20ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2025 12:07
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூலை 28ல் தேரோட்டம் நடக்கிறது.
தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கொண்ட ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் தேரோட்ட திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்நிலையில் இந்த ஆண்டும் ஜூலை 20 காலை 7:00 மணிக்குமேல் 8:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் ஆடிப்பூரத் திருவிழா துவங்குகிறது. அன்று இரவு 10:00 மணிக்கு பதினாறு வண்டி சப்பர விழா நடக்கிறது. ஜூலை 24 காலை 10:00 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு 10:00 மணிக்கு 5 கருட சேவையும், ஜூலை 26 இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள், ரங்க மன்னார் சயனத்திருக்கோலமும், ஜூலை 28 காலை 9:10 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. ஜூலை 31 மாலை 6:00 மணிக்கு புஷ்ப யாகத்துடன் ஆடிப்பூரத் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பட்டர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.