பழமையான நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2025 02:07
நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரத்தில் 1,400 ஆண்டுகள் பழமையான ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணிகள் நடந்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன. அதேப் போன்று, நாயன்மார்களால் பாடல் பெற்ற கோவில் என்பதற்கான கல் வெட்டுகளும் உள்ளன. இங்கு பைரவருக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பாகும். ஹிந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் வளாகத்திலேயே பெரிய குளம் உள்ளது. இதில் ஆனி மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது தெப்பல் உற்சவம் நடக்கும்.
கோவில் கும்பாபிஷேகம் கடைசியாக 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென்பது ஆகம விதியாகும். இதற்காக திருப்பணிகள் செய்ய 41 லட்சமும், தேர் செய்ய 43 லட்சமும் அறநிலையத்துறை ஒதுக்கியது. இதில் தேர் செய்யும் பணிகள் முடிந்து வெள்ளோட்டமும் நடத்தினர். கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகளை 2 ஆண்டுகளுக்கு முன் துவக்கினர். கோவில் கோபுரங்கள் புனரமைப்பு பணி முடிந்து பெயிண்டிங் வேலையும் முடிந்தது. அப்போது தான் கோவிலின் மகா மண்டபத்தில் கருங்கல் துாண்களில் விரிசல் இருப்பது தெரிந்தது. பழமையான கோவில் என்பதால் தொல்லியியல் துறையில் அனுமதி பெற்றே மகா மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். இதற்கான அனுமதி கிடைக்க காலதாமதம் ஏற்பட்டதால் அந்த பணியை செய்ய முடியவில்லை. தற்போது தான் அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. கருங்கல் மண்டபத்தை முழுமையாக பிரித்து விட்டு சரி செய்வதா அல்லது ஜாக்கி மூலம் துாக்கி விரிசல் விழுந்த துாண்களை மட்டும் மாற்றுவதா என்பதில் குழப்பம் நிலவுகிறது. இதனால் மகா மண்டபம் பணிகளை துவக்காமல் உள்ளனர். அந்த பணியை முடித்தால் தான் கும்பாபிஷேகம் செய்ய முடியும். கோவிலுக்கு சொந்தமாக 30 ஏக்கர் நிலம் இருந்தும் திருப்பணியை முடிக்காமல் காலம் தாழ்த்துவதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் மகா மண்டபம் பணியை முடித்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.