பல்லடம்; காளியை வழிபட்டவர்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை என, பல்லடம் அருகே, பிரத்தியங்கிரா தேவி கோவிலில் நடந்த ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டில் அறிவுறுத்தப்பட்டது.
பல்லடத்தை அடுத்த, வெங்கிட்டாபுரத்தில், அதர்வண பத்ரகாளி பீடம் உள்ளது. நேற்று, ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக, தீச்சட்டி, தீர்த்த கலசங்கள் எடுத்துக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. அமாவாசையை முன்னிட்டு நடந்த நிகும்கும்பலா யாகத்தை துவக்கி வைத்து அதர்வண பத்ரகாளி பீடாதிபதி தத்தகிரி சுவாமிகள் பேசியதாவது: சகல ஷேமத்தையும் கொடுக்கக்கூடியது நிகும்பலா யாகம். அன்னை மட்டுமே வியாதிகள் வராமல் காப்பாள். மரண பயம், கடன் பிரச்னை, தரித்திரம் போக்குபவள்தான் பிரத்யங்கிரா தேவி. காளியை வழிட்டவர்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை. காளியை வழிபட்டு பில்லி, சூனியம் என, தவறாக பயன்படுத்தினால், அது அவர்களுக்கே திரும்பி விடும் ஆபத்து உள்ளது. அமாவாசையில் நடக்கும் நிகும்பலா யாகத்துக்கு சக்தி அதிகம். அமாவாசைதான் அம்பாளுக்கு மிகவும் விஷேசமான தினமாகும். இந்த நாளில், என்னை தேடி வா உன்னை நான் நாடி வருவேன் என்கிறாள் அம்பாள். இந்நாளில் அம்பாளை தரிசிப்பது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசை அன்று தரிசிப்பது மிகவும் பாக்கியம். வரமிளகாயை தான் நிக்கும்பலா என்று கூறுவார்கள். மகாலட்சுமி பிறந்த மாதம் ஆடி மாதம் என்பதால்தான், இம்மாதத்துக்கு தனிச்சிறப்பு உள்ளது. வரமிளகாய் ஹோமத்தால் அனைத்து திருஷ்டிகளும் விலகும். இவ்வாறு அவர் பேசினார். நிகும்பலா யாகத்தை தொடர்ந்து, சிறப்பு தங்க கவச அலங்காரத்தில், பிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.