பதிவு செய்த நாள்
21
டிச
2012
10:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், திருவாதிரை திருவிழா மாணிக்க வாசகருக்கு காப்பு கட்டுடன் துவங்கியது. இக்கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு மூலவர் சத்தியகிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து திருமுறை பாடப்பட்டது. பல்லக்கில் மாணிக்கவாசகர் கோயில் திருவாட்சி மண்டபத்தை மூன்று முறை வலம் சென்று எழுந்தருளினார். சிவாச்சார்யாரால் மாணிக்க வாசகருக்கு காப்பு கட்டப்பட்டது. ஓதுவாரால் திருவெண்பாவை 21 பாடல்கள் பாடப்பட்டன. இந்நிகழ்ச்சி டிச., 26 வரை நடக்கும். டிச., 27 காலை மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவலம் நிகழ்ச்சி நடக்கும். இரவு கோயிலுக்குள் கண்ணூஞ்சல் முடிந்து, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, கோயில் முன்பு சிறிய ராட்டினத்தில் எழுந்தருளி ராட்டின விழா நடக்கும். டிச., 28 அதிகாலை கோயில் மகா மண்டபத்தில் மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு தைல காப்பு சாத்துப்படியாகி, உற்சவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தனித்தனி பூ சப்பரத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள் கிரிவலம் சென்று அருள்பாலிப்பர்.