பதிவு செய்த நாள்
21
டிச
2012
10:12
பிறர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்காதீர்கள். அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே, நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் பிறரை அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும், என்கிறார் இயேசுநாதர். மற்றவர்கள் முன்னிலையில் மதிப்பிற்குரியவராக, கண்ணியமிக்கவராக தங்களை காட்டிக்கொள்ள வேண்டுமென்பதற்காக பிரயாசைப்படுபவர்கள் பலர் உள்ளனர். தங்களைவிட பொருளாதாரத்திலும், திறமையிலும், வலிமையிலும் பின்தங்கியவர்களை மட்டம் தட்டி பேசுவதோடு அவர்கள் செய்த சிறிய தவறுகளுக்கு, பெரிய தண்டனைகளை கொடுத்து மகிழ்வதை தங்களின் பலமாகக் கருதுகின்றனர். கண்ணியவானாக தன்னை கருதிக்கொள்பவன் வேண்டு மானால் அதை பலமாகக் கருதலாம். ஆனால், இயேசுநாதர், அது அவரின் பலவீனம் என்கிறார்.
எவனொருவன் தவறு செய்கிறானோ, அவனுக்கு தண்டனை அளிப்பது கடவுளின் வேலை. அந்த தண்டனை யாரால், எப்படி நிறைவேற்றப்படும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். அப்படி இருக்கும்போது அடுத்தவரைக் குற்றவாளி என்று கூறுவதும், அவனுக்கு தண்டனை அளிப்பதை பற்றி விவாதிப்பதும் தேவையற்றது, என்கிறார் இயேசுநாதர். பிறருக்கு நாம் என்ன செய்கிறோமோ, அதுவே நமக்கும் அளிக்கப்படும். எந்த அளவு கோலால் பிறரை நாம் மதிப்பிடுகிறோமோ, அதே அளவுகோலால் நம்மையும் இறைவன் மதிப்பிடுவார். எனவே குற்றமற்றவராக, பிறரைக் குறைகூறாதவராக வாழும் வரத்தை நிறைவாக தருமாறு இறைவனிடம் இறைஞ்சுவோம்