காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, அதிகாலை மூலவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்பு கால சந்தி பூஜை முடிந்தவுடன், ஆண்டாள் சன்னதியில் விஷ்வக்ஷேனர் பூஜை, புண்ணியாவசனம், கலச ஆவாகனம் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பின் வெள்ளி சப்பரத்தில், வெண்பட்டு குடை சூழ மேளதாளம் முழங்க, கோவில் வளாகத்தில் வலம் வந்து, ரங்க மண்டபத்தில் ஆண்டாள் எழுந்தள்ளினார். அதைத் தொடர்ந்து அரங்கநாத பெருமாளிடம் இருந்து மாலை, சடாரி மரியாதை சாற்றப்பட்டது. கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் திவ்ய பிரபந்தத்தில் நாச்சியார் திருமொழி பாசுரங்களை சேவித்தனர். ஆண்டாளிடமிருந்து மாலை அரங்கநாதருக்கு சாற்றப்பட்டது. அரங்கநாதர் சுவாமியிடம் இருந்து சடாரி மரியாதை செய்யப்பட்டு ஆண்டாள் ஆஸ்தானம் அடைந்தார். பின்பு உச்சி கால பூஜை, சற்று முறை, தீபாராதனை ஆகியவை நடந்தது. இந்த வைபவத்தில் அர்ச்சகர்கள், மிராஸ்தர்கள், அறங்காவலர்கள், கோவில் செயல் அலுவலர் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.