திருப்போரூர்; நெல்லிக்குப்பம் நெல்லீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர விழா விமரிசையாக நடந்தது. திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சியில், 300 ஆண்டுகள் பழமையான, மங்களாம்பிகை சமேத நெல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நெல்லீஸ்வரர், மங்களாம்பிகை அம்மனுக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின், மங்களாம்பிகை அம்மனுக்கு வளையலால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன், உட்பிரகாரத்தில் உலா வந்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மாமல்லபுரம், அண்ணாநகரில் உள்ள சப்த கன்னியர் கோவிலில், ஆடிப்பூரம் உத்சவத்தை முன்னிட்டு, சப்த கன்னியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சப்த கன்னியருக்கு வளையல் மாலையை அணிவித்த பக்தர்கள், ஆடிப்பூர வளைகாப்பு உத்சவம் நடத்தி வழிபட்டனர்.