மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்து பூஜையில் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் விழா, இம்மாதம், 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 27ம் தேதி கொடியேற்றமும், 29ம் தேதி குண்டம் இறங்குதலும் நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு மாவிளக்கு படைக்கும் பூஜை நடைபெற்றது. இதில் தேக்கம்பட்டி, நெல்லித்துறை, அம்மன் நகர், வேல் நகர், கூடுதுறை மலை, சமயபுரம், அண்ணா நகர், காந்தி நகர், உப்புபள்ளம் உள்பட சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த, நூற்றுக்கணக்கான பெண்கள், மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். பின்பு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். இன்று பரிவேட்டையும், குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், வானவேடிக்கையும் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி மகா அபிஷேகம், மாலையில் மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது. இரண்டாம் தேதி அபிஷேக பூஜையும், மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜையும், நாலாம் தேதி, 108 திருவிளக்கு பூஜையும், ஐந்தாம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. பூஜை மற்றும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.