திருக்கோஷ்டியூர் கோயில் தங்க விமானத் திருப்பணி : ஸ்ரீவி.,ஜீயர் பார்வையிட்டார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2025 11:08
திருப்புத்தூர; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் நடந்து வரும் அஷ்டாங்க விமானத் தங்கத்திருப்பணியை பார்வையிட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் விமானக் கவசத்தில் தங்க தகடு ஒட்டினார்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மூலவர் விமானத்திற்கு தங்கத் திருப்பணியில் இறுதிக்கட்ட பணிகளான விமான தாமிர கலசத்தில் தங்க இழை ஒட்டும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை கோயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மனவாள மாமுனிகள் மடத்தின் மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சடகோப இராமானுஜ 24 வது பட்டம் ஜீயர் வருகை தந்தார். கோயில் பட்டாச்சாரியார்கள் மற்றும் கண்காணிப்பாளர் வரவேற்பளித்தனர். தொடர்ந்து திருப்பணியை பார்வையிட்ட ஜீயர் விமான தாமிர கவசத்தில் தங்க இழையை ஒட்டி திருப்பணியை ஆசிர்வதித்தார்.
திமுகவினருக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளது; பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,‛ இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளில் குறை ஏதும் தெரியவில்லை. நன்றாகத்தான் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது. இது கலியுகம் என்பதால் கடவுள் எப்படி நினைக்கிறார் என்று தெரியவில்லை. கோயில்கள் அறநிலைத்துறையிடமம் இருக்க வேண்டுமா அல்லது வெளியில் போக வேண்டுமா என்பது கடவுளின் இஷ்டம். நாம் ஒற்றுமையாக இருந்தால் கோயில் விவகாரத்தில் அரசு தலையிடாது. தகராறு ஏற்பட்டால்தான் அரசு எடுக்க கூடிய நிலை ஏற்படுகிறது. கடவுள் இல்லை என்று சொல்லக்கூடிய திமுக அரசு இன்று அறநிலையத்துறை மூலம் இத்தனை கும்பாபிஷேகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் நாம் சந்தோஷப்பட வேண்டும். அவர்களுக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று கடவுள் நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு நடைமுறை உள்ளது. அந்த காலத்து ஆகமத்துக்கு உட்பட்டு நடக்கின்ற கோயில்களில் மற்ற அர்ச்சகர்கள் வர முடியாது. தனியார் விருப்பப்பட்டு கட்டப்படும் கோயில்களில் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக இருக்கலாம்.’ என்றார்.