பாகூர்; கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் தீ மிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கன்னியக்கோவிலில், பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், தீமிதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, மாலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, கோவில் கொடிமரத்தில் கொடியேற்றி, மகா தீபாராதனை நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, வரும் 8ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, அன்று மதியம் 12:00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம், மாலை 5:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடக்கிறது. 9ம் தேதி தெப்ப உற்சவம், 10ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மாறன், விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.