நத்தம்: நத்தம் செந்துறை சாலையில் உள்ள கழுகுகருப்பு நாகம்மாள் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த மாதம் ஜூலை.26-ம் தேதி அழகர்கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சந்தனக்கருப்பு சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் காலை சந்தன கருப்பு சுவாமி கோவிலில் பொங்கல் வைத்தல்,இரவு அம்மன்குளத்தில் இருந்து முளைப்பாரி ஊர்வலத்துடன் கரகம் கோவிலுக்கு எடுத்து வருதல்,அக்னிசட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.