பதிவு செய்த நாள்
22
டிச
2012
10:12
லண்டன்: மாயன் காலண்டர் கூற்றுப்படி, உலகம் அழியும் என, பரப்பப்பட்ட வதந்தி, பொய்யானது. மெக்சிகோ நாட்டை பூர்வீகமாக கொண்ட, மாயன் இனத்தினர், 5,126 ஆண்டுகளை கொண்ட காலண்டரை தயாரித்து பயன்படுத்தி வந்தனர். இந்த காலண்டர், கி.மு., 3114ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தது. மாயன் காலண்டர், 1.44 லட்சம், நாட்களை கொண்டது. அதன் பின், இந்த காலண்டர் மறு சுழற்சிக்கு உட்பட்டது. நேற்றுடன் இந்த காலண்டர் முடிந்ததால், உலகம் அழிந்து விடும் என, சிலரால் வதந்தி பரப்பப்பட்டது. அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆய்வு மையம் இதை மறுத்தது. தென் அமெரிக்க நாட்டவர்கள், மாயன் காலண்டரை அதிகம் நம்புகின்றனர். மாயன் காலண்டர் நேற்றுடன் முடிந்ததை, பலர் விழாவாக கொண்டாடினர். சீனாவில் உள்ள ஒரு மத அமைப்பினர், உலகம் அழிவதற்குள் சொத்துக்களை எல்லாம் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என, பிரசாரம் செய்தனர். இந்த அமைப்பை சேர்ந்த, 1,000 பேரை, சீன அரசு கைது செய்தது.
மாயன் காலண்டரை பின்பற்றும் சிலர், உலகம் அழிவதற்குள் ஒட்டு மொத்தமாக இறந்துவிட திட்டமிட்டனர். இது தொடர்பாக இணைய தளங்களில் சிலர் அழைப்பு விடுத்தனர். பேஸ்புக் இணைய தளத்தில், இதற்கான விளம்பரங்கள் வெளியானதால், துருக்கி, அர்ஜென்டினா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில், உயர்ந்த மலை பகுதிகளுக்கு செல்லும் வழிகளை, போலீசார் அடைத்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மெக்சிகோவில் உள்ள மாயன் கோவில்களில், பலர் வழிபாடு நடத்தினர். துருக்கியில் கன்னி மேரி, தேவலோகத்துக்கு சென்ற இடமாக கருதப்படும், சிரின்ஸ் மலையில், பலர், கூட்டு பிரார்த்தனை செய்தனர். கவுதமாலா நாட்டிலும், மாயன் இன வம்சத்தவர்களாக கூறி கொள்பவர்கள், சில சடங்குகளை நடத்தினர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காததால், உலகம் அழியும் என, பரப்பப்பட்ட தகவல் வதந்தி என்பது நிரூபனமானது.