திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் பகதர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2025 12:08
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா கடந்த14 ம்-தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நாள்தோறும் காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் தங்கச் சப்ரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 8-ம்திருவிழா அன்று சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் பத்தாம் திருநாளான இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.00 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாரானையும், 5 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் சுவாமி குமர விடங்க பெருமான் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தேரில் எழுந்தருள தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேரானது ரதவீதி நான்கிலும் பவனி வந்து நிறைவடைந்ததும் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து தேர் ரதவீதி நான்கிலும் பவனி வந்து நிறைவடைந்ததும் வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேர் புறப்பட்டு ரதவீதிகளில் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது. இந்த தேரோட்டத்தில் கோவில் நிர்வாகிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.