இளையான்குடி; இளையான்குடியில் நடைபெற்ற எம்பிரான் இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழா ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா இன்று நடைபெற்றதை முன்னிட்டு சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் அதிகாலை உற்சவர்கள் ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன், மாறநாயனார், புனிதவதி அம்மன் சுவாமிகளுக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு ஞானாம்பிகை அம்மன் சன்னதி முன்புறம் உள்ள மண்டபத்தில் அலங்காரத்தில் எழுந்தருளினர்.இதனைத் தொடர்ந்து கைலாய வாத்தியங்கள் முழங்க அபிஷேக,ஆராதனைகள், பூஜைகள்,திருமுறை பாராயணம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு சிவாக்கர தேசிகரின் சொற்பொழிவு நிகழ்ச்சியும்,இரவு 9:00 மணிக்கு நாயன்மாருக்கு சிவபெருமான் காட்சியளித்தலும் சிவனடியார்களின் வீதி உலாவும் நடைபெற்றது. குருபூஜை விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானம் நடந்தது. விழாவில் இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் நூற்றுக்கணக்கான சிவனடியார்களும் கலந்து கொண்டனர்.