பதிவு செய்த நாள்
02
செப்
2025
10:09
பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது
பழநி, முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று (செப்.2.,) முதல் செப்.12.,வரை ஆவணி பிரம்மோற்ஸவ விழா கொண்டாடப்படுகிறது. இதில் இன்று (செப்.2.,) காலை கோயில் வெளிப்புற பிரகாரத்தில் கொடிமரம் முன்பு ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ அகோபில வரதராஜ பெருமாள் துணை என எழுதப்பட்டு, சங்கு, சக்கரம், திருநாமம், கருடாழ்வார், தாம்பூலம், சடாரி, தூபம் ஆகியவை வரையப்பட்ட மஞ்சள் நிற கொடி வைக்கப்பட்டது. கொடிக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடந்த பின்பு காலை 8:45 மணியளவில் கோயில் முன்பு உள்ள கொடிமரத்தில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்று விழா துவங்கியது. இயற்றத்தில் துணை ஆணையர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செப்.8., மாலை 6:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற உள்ளது. செப்.9., இரவு பாரிவேட்டை நடைபெறும். செப்.,10.,காலை 7:00 மணிக்கு மேல் தேர் வடம்பிடித்தல் நடைபெறும். பிரம்மோற்சவ திருவிழா நாட்களில் பவளக்கால் சப்பரம்,அனுமார் வாகனம், கருட வாகனம், தோளூக்கினியாள், சேஷ வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடைபெறும். செப்.12., விடையாற்றி உற்சவத்திற்கு பிறகு திருவிழா நிறைவடையும்.