சுண்டக்காமுத்தூர் பஸ் ஸ்டாப் பின்புறம், பழமை வாய்ந்த ஸ்ரீ அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேக விழா, கடந்த, 28ம் தேதி, முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. செப்., 2ம் தேதி மங்கள வாத்தியங்கள் முழங்க, திருக்குடங்கள் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, மாலையில், ஆதிமூல விநாயகர் கோவிலில் இருந்து, கலசங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. செப்., 3ம் தேதி, காலை, முதல்கால வேள்வி பூஜையும், மாலை, இரண்டாம் கால வேள்வி பூஜையும் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு, மூன்றாம் கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 8:30 மணிக்கு, யாகசாலை மண்டபத்திலிருந்து திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. அதனைத் தொடர்ந்து, காலை, 8:45 மணிக்கு, காவேரிப்பாக்கம் ஜெகந்நாத பட்டர் தலைமையில், அரங்கநாத பெருமாள், அஷ்டலட்சுமி, ஜெயன், விஜயன், ஆஞ்சநேயர், கருடாழ்வார், வராகர், ஹயக்ரீவர், தன்வந்திரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், மங்கள வாத்தியங்கள் முழங்க, மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கோவை ஜீயர் ஜெகநாதர் சுவாமியின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. கும்பாபிஷேகத்தின்போது, சாரல் மழை பெய்தது. அப்போது, மழையில் நனைந்தபடியே, பக்தர்கள் பெருமாளை வணங்கி சென்றனர்.