பதிவு செய்த நாள்
24
டிச
2012
10:12
அருமனை:அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் நடத்தும் 15 வது கிறிஸ்மஸ் விழாவில் நிறைவு நாளான இன்று 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடக்கிறது. அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.22 மற்றும் 23ம் தேதிகளில் அனைத்து கிறிஸ்தவ சபையினரும் இணைத்து அருமனையில் கிறிஸ்மஸ் விழா கடந்த 14 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகிறது. கடந்தகால விழாக்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, நடிகர் சங்க தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ., ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அனைத்துசபை பேராயர்கள், ஆயர்கள், பாஸ்டர்கள், அருட்தந்தையர்கள், எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் கலந்து கொண்டுள்ளனர். விழாவில் முக்கிய அம்சமாக 500க்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் அணிவகுப்பு, அலங்கார ரதங்கள் அணிவகுப்பு, கேரளாவின் புகழ்பெற்ற ஆண், பெண் சிங்காரிமேளம், நாட்டுப்புற கலைஞர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, பேண்ட் செட், கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் நிகழ்வுகளுடன் புண்ணியம் ஜங்ஷனில் இருந்து நெடுங்குளம் வரை ஊர்வலம் நடத்தப்படுகிறது.
சிறப்பு விருந்தினர்கள் தனிமேடையில் அமர்ந்து ஊர்வலத்தை கண்டுகளிப்பார்கள். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சிகளை காண வருவார்கள். 15வது வருட கிறிஸ்துமஸ் விழா நேற்று துவங்கியது. நிறைவு நாளான இன்று(23ம் தேதி) விழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்களுக்கு குழித்துறையில் 500 கார்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மாலை நெடியசாலை ஏ.ஜி., சபை வளாகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் அணிவகுப்பு, 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், ஆண், பெண் சிங்காரி மேளம், கோலாட்டம், ரோப் விளையாட்டு, கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் தேவ தூதர்கள் அணிவகுப்பு, ஆதிவாசி மக்களின் கலை நிகழ்ச்சிகள், அலங்கார ரத ஊர்திகள் உள்ளிட்டவைகளுடன் ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலம் நெடியசாலை, அருமனை வழியாக பொதுக்கூட்ட மேடையை அடைகிறது. தொடர்ந்து நடக்கும் பொதுக்கூட்டத்தை பாஸ்டர் ஜாண் பெண்டிங் ஜெபம் செய்து துவக்கி வைக்கிறார். கூட்டத்திற்கு இயக்க தலைவர் தேவராஜ் தலைமை வகிக்கிறார். நிர்வாகிகள் அருள், ஜாண் செல்வராஜ், சிங், டார்வின், எட்வின், சக்கரா, அகஸ்டின்டேவி, காட்வின் ஜெயசன், ஜெயசிங் முன்னிலை வகிக்கின்றனர்.
சட்ட ஆலோசகர் ஜெஸ்டின் வரவேற்கிறார். சி.எஸ்.ஐ., பேராயர் தேவகடாட்சம், கோட்டாறு மறைமாவட்ட பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ், தக்கலை மறைமாவட்ட பிஷப் ஜார்ஜ் ராஜேந்திரன், மார்த்தாண்டம் மறைமாவட்ட பிஷப் வின்சென்ட் மார் பவுலோஸ், பெந்தேகோஸ்தே கூட்டமைப்பு தலைவர் தேவசுந்தரம், முன்னாள் பிஷப் கேசரி ஆசியுரை வழங்குகின்றனர். நடிகர் பிரசாந்த், அவரது தந்தை டயரக்டர் தியாகராஜன், காங்., வர்த்தக பிரிவு தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ., பேசுகின்றனர். இயக்க செயலாளர் ஸ்டீபன் விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்குகிறார். நிகழ்ச்சியில் அமைச்சர் பச்சைமால், ஹெலன் டேவிட்சன் எம்.பி., காங்., கொறடா ஜாண்ஜேக்கப், எம்.எல்.ஏ., க்கள் பிரின்ஸ், புஸ்பலீலா ஆல்பன், விஜயதரணி, நாஞ்சில் முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் லீமாறோஸ், குமாரதாஸ், ராஜேந்திர பிரசாத், பைஜூ, அருட்தந்தையர்கள் காட்வின், பேபிஜாண், ராஜன், பாஸ்டர்கள் மேஜர் சாத்ராக், கிறிஸ்டோபர் செல்வின், நெல்சன், ராஜாகிறிஸ்டோபர், தேவதாஸ், கிறிஸ்துதாஸ், ஜாண் கிறிஸ்டோபர், உட்பட பலர் பேசுகின்றனர். ரூபன் கல்வி அறக்கட்டளை தாளாளர் ரூபன் ஏழைகளுக்கு நலத்திட்டங்களை வழங்குகிறார். துறைத்தலைவர் ஜோஸ் செல்வன் நன்றி கூறுகிறார். விழாவை முன்னிட்டு அருமனை சுற்று வட்டாரம் மற்றும் குழித்துறை நெடுஞ்சாலையில் பிரமாண்ட பிளக்ஸ் போர்டுகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளன. அருமனை பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.