பதிவு செய்த நாள்
27
டிச
2012
11:12
குன்னூர் : குன்னூரில் செண்டை மேளம் முழங்க ஐயப்பன் தேர் பவனி கோலாகலமாக நடந்தது. குன்னூர் ஐயப்பன் பக்த சங்கம் சார்பில், 46வது ஆண்டு மண்டல பூஜை கடந்த 25ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அபிஷேக ஆராதனை, அன்னதானம் நடந்தது.நேற்று காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம்; 9:00 மணிக்கு துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து தீர்த்த குடம், அபிஷேக பொருட்கள் கொண்டு வந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் திருவீதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை சுவாமி சங்கர சுவாமிகள் துவக்கி வைத்தார். வண்டிசோலை சாரதா பிரம்மா வித்ய கேந்திர ஆஷ்ரமத்தை சேர்ந்த சந்நியாசினி குருப்ரியானந்தா, கல்லாறு அஷ்ரமத்தை சேர்ந்த சுவாமி வேதாந்தானந்தா, குன்னூர் எம்.எல்.ஏ., ராமசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். செண்டை வாத்தியம் முழுங்க, தாலமேந்திய பெண்கள் வலம் வந்தனர். பாலக்கொம்பு சப்தத்தில் உற்சவ மூர்த்தி, புலி வாகனத்தில் திருவீதி உலா வந்தார். ஐயப்பன் கோவிலிருந்து புறப்பட்ட ஊர்வலம், பஸ் நிலையம், சித்தி விநாயகர் ஆலயம், கேஷ் பஜார், காமராஜர் சிலை, டி.டி.கே., சாலை, விநாயகர் கோவில், மேல்கடை வீதி, தந்தி மாரியம்மன் கோவில், ராஜாஜி நகர் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் வந்த கருடன் அலங்காரம் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
* குன்னூர் நகர, ஆட்டோ மற்றும் பாரம் ஏற்றும் ஆட்டோ டிரைவர்கள், உரிமையாளர்கள் சார்பில் 20ம் ஆண்டு ஐயப்பன் விளக்கு பூஜை நேற்று நடந்தது. குன்னூர் மெயின் ஆட்டோ நிலையத்தில் அலங்கார மேடை அமைக்கப்பட்டு, ஐயப்பன் விளக்கு பூஜை விழா சிறப்பாக நடந்தது. ஐயப்பன் விளக்கு பூஜை ஊர்வலமும், பின்னர் 12ம் மணியளவில் அன்னதானம் நடந்தது.இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
மஞ்சூர்: மஞ்சூரில் நடந்த 49ம் ஆண்டு ஐயப்பன் விளக்கு பூஜையையொட்டி, காலை 6:15 மணிக்கு கணபதி பூஜை, 11:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. தொடர்ந்து, அலங்கரித்த புலி வாகனத்தில் யானை, பஞ்சவாத்தியம், சிங்காரி மேளம், செண்டை மேளம், கேரளா பேண்டு வாத்தியம் முழங்க, ஐயப்பன் ஊர்வலம் குந்தா சிவன் கோவிலுக்கு சென்றது. பின், பாலகொம்பு எடுத்து மேளங்கள் முழங்க விளக்கு ஊர்வலம் திடலுக்கு வந்தடைந்தது. இரவு 7 மணிக்கு நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மஞ்சூர் ஐயப்பன் பக்த கோடி குழுவினர் செய்திருந்தனர்.