திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2025 11:11
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 15ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது இவ்விழாவிற்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்பாள் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது தொடர்ந்து பொடி பட்டம் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அம்பாள் சன்னதி கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க பஞ்ச வாத்தியம் இசைக்க திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பால் பன்னீர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. திருவிழா தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றத்தையொட்டி காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தங்க பூங்கோவில் சப்பரத்தில் கொடிமரம் முன்பு எழுந்துதருளி சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அம்பாளுக்கும் கொடி மரத்திற்கும் சுவாடச உபச்சார மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பா நதியில் தவம் இருக்கும் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் வரும் 14ஆம் தேதி மதியமும் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளை திருமணம் செய்யும் திருக்கல்யாணம் 15ஆம் தேதி அதிகாலையும் நடைபெறுகிறது.