குன்னுார்: குன்னுார்– ஊட்டி சாலையில் அமைந்துள்ள வெலிங்டன் ஐயப்பன் கோவிலில், மண்டல மகோற்சவ விழா நடந்து வருகிறது. 39வது ஆண்டு விழாவையொட்டி, நேற்று ஹரி குருசாமி தலைமையிலான ஐயப்ப பக்தர்கள் குழுவினரின் பாலாபிஷேகம் நடந்தது.
அதில், பகவதி சன்னதியின் முன் விளக்கேற்றி, சிறப்பு வழிபாடுகளுடன் கோவிலை சுற்றி பால் குடங்கள் மற்றும் புஷ்ப ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர், ஐயப்பனுக்கு பாலாபிஷேகம், கலபாபிஷேகம் மற்றும் தேன், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை ஆகியவற்றுடன் நிறைவு பெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வரும், 27ல் காலை, 6:00 மணி முதல் 10:00 மணி மற்றும் மாலை, 5:00 மணி முதல் 8:00 மணி வரை மண்டல பூஜை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜன., 14ல் மகரஜோதி சிறப்பு பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, வெலிங்டன் ஐயப்பகோவில் பொது செயலாளர் முரளிதரன் தலைமையில் ஐயப்ப பக்த குழுவினர் செய்து வருகின்றனர்.