திருக்கோஷ்டியூரில் டிச.20ல் பகல் பத்து துவக்கம்; டிச.30 ல் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2025 10:12
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 21 நாட்கள் நடைபெறும் அத்யயன உத்ஸவத்தில் பகல்பத்து டிச.20ல் துவங்குகிறது. டிச.30 ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.
சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் அத்யயன உத்ஸவத்தில் பகல் பத்து (பகலில் பெருமாளுக்கு சேவை) மற்றும் ராப்பத்து (இரவில் பெருமாளுக்கு சேவை) நடைபெறும். டிச.20 காலை பெருமாள் ஆண்டாள் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்து காப்புக்கட்டி பகல்பத்து உத்ஸவம் துவங்கும். திருமங்கையாழ்வாருக்கு மரியாதை செய்து திருமொழித் திருநாள் நடைபெறும். மாலையில் மண்டகப்படி தீபாராதனை நடந்து மரியாதை வழங்கிய பின் சுவாமி மூலஸ்தானம் எழுந்தருளல் நடைபெறும். பகல் பத்து நிறைவு நாளான டிச.29 மாலையில் நாச்சியார் திருக்கோலத்தில் பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து அருள்பாலிப்பார். டிச.30ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலையில் பெருமாள் திருமாமணி மண்டபத்தில் சயனத்திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சித்தருவார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும். மாலையில் ராஜாங்க கோலத்திலும், இரவில் தங்கப் பல்லக்கில் ராஜ அலங்காரத்திலும் பெருமாள் எழுந்தருளி சொர்க்கவாசல் திறக்கப்படும். மறுநாள் முதல் ராப்பத்து உத்ஸவம் துவங்கும். தினசரி மாலையில் தாயார் சன்னதியில் பெருமாள் எழுந்தருளலும், சொர்க்கவாசல் கடந்தருளி ஆழ்வார் பாசுரங்கள் சேவித்து நம்மாழ்வார் திருவடி தொழுதலும் ஜன.8 வரை நடைபெறும்.