உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2026 07:01
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா உடன் ஆருத்ரா தரிசன விழா நிறைவடைந்தது.
மங்களநாதர் சுவாமி கோயிலில் வடக்கு பகுதியில் தனி சன்னதியில் உள்ள மரகத நடராஜருக்கு சந்தனம் பூசப்பட்ட பிறகு பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்வதற்கு ஏற்றவாறு கம்பி கதவுகள் இரவு 7:35 மணிக்கு பூட்டப்பட்டது. நேற்று இரவு 8:00 மணிக்கு மாணிக்கவாசகப் பெருமானுக்கு சுவாமி காட்சி கொடுத்த நிகழ்வு நடந்தது. இரவு 9:00 மணிக்கு துவங்கிய புறப்பாடு நள்ளிரவு 1:00 மணிக்கு நிறைவடைந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், மற்றொரு ரிஷப வாகனத்தில் மங்களேஸ்வரி அம்மன் உலா வந்தனர். மாணிக்கவாசகர், நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. கயிலை வாத்தியம் உள்ளிட்ட மேளதாளங்கள் முழங்க உத்தரகோசமங்கை நான்கு ரத வீதியிலும் மின்னொளி அலங்காரத்தில் உலா வந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்தனர்.