ஆக்சிஜன் சிலிண்டருடன் மனைவியை கோவிலுக்கு அழைத்து வந்த கணவர்
பதிவு செய்த நாள்
06
பிப் 2026 10:02
பெலகாவி: மனைவி கடுமையான நோயால் அவதிப்பட்டாலும், அவரை ஆக்சிஜன் சிலிண்டருடன் அழைத்து வந்து, ராய்பாகின் மாயக்கா தேவியை கணவர் தரிசனம் செய்ய வைத்தார். பெலகாவி மாவட்டம் ராய்பாக் தாலுகா சிஞ்சலி கிராமத்தில், பிரசித்தி பெற்ற மாயக்கா தேவி கோவில் உள்ளது. புராதன கோவில் என்பதால், அதிகமான பக்தர்கள் வருகின்றனர். கர்நாடகாவை விட, மஹாராஷ்டிராவில் தான் மாயக்கா தேவிக்கு, அதிக அளவிலான பக்தர்கள் உள்ளனர். ஆண்டு தோறும் இந்த கோவிலில் திருவிழா நடப்பது வழக்கம். அதில் பங்கேற்க, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். குறிப்பாக, மஹாராஷ்டிராவில் இருந்தே அதிக பக்தர்கள் வருவர். மாயக்கா தேவி கோவிலில், நேற்று முன்தினம் திருவிழா துவங்கியது. மஹாராஷ்டிராவின் பண்டராபுராவை சேர்ந்த தம்பதி, 15 ஆண்டுகளாக, இந்த திருவிழாவுக்கு தவறாமல் வந்துள்ளனர். இந்த ஆண்டும் அதுபோல வர ஆசை தான். ஆனால், அவர்களில் மனைவிக்கு உடல் நலம் பாதிப்படைந்து, சுவாசப்பை பிரச்னையால் அவதிப்படுகிறார். மூச்சுத்திணறல் இருப்பதால் ஆக்சிஜன் பைப் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனாலும், அவருக்கு இம்முறையும், மாயக்கா தேவி திருவிழாவுக்கு செல்ல வேண்டும்; தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. தன்னை கோவிலுக்கு அழைத்து செல்லும்படி கணவரிடம் கேட்டார். கணவரும் டாக்டர்களின் ஆலோசனைப்படி, ஆக்சிஜன் சிலிண்டருடன் 176 கி.மீ., பயணித்து, ராய்பாகின் சிஞ்சலி மாயக்கா தேவி கோவிலுக்கு, நேற்று அழைத்து வந்தார். மனைவியை தரிசனம் செய்ய வைத்தார். தன் மனைவி விரைவில் குணமடைய வேண்டும் என்றும், பிரார்த்தனை செய்தார். மனைவியை ஆக்சிஜன் சிலிண்டருடன் கோவிலுக்கு கணவர் அழைத்து வந்ததை, பக்தர்கள் தங்களின் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அதனால், தம்பதியை பலரும் பாராட்டுகின்றனர். கணவர் கூறுகையில், ‘‘மாயக்கா தேவியை தரிசிக்க வேண்டும் என, என் மனைவி விரும்பினார். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அம்பாளை தரிசித்தால் மட்டுமே, நிம்மதி கிடைக்கும். எனவே இங்கு வந்து தரிசனம் செய்தோம்,’’ என்றார்.
|