காஞ்சிபுரம் --– வந்தவாசி சாலை பெருநகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில், சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார். ஐந்தாம் நாள் உத்சவமான, ஜன., 27ம் தேதி திருக்கல்யாண உத்சவமும், ஏழாம் நாள் உத்சவமா ன ஜன., 29ம் தேதி தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உத்சவமான, ஜன., 31ம் தேதி, 63 நாயன்மார்கள் உத்சவமும் விமரிசையாக நடந்தது. இதில், 10ம் நாள் திருவிழாவான 26 ஊர் சுவாமிகள் செய்யாற்றில் எழுந்தருளும் தைப்பூச ஆற்று திருவிழா கடந்த பிப்., 1ம் தேதி விமரிசையாக நடந்தது. 12ம் நாள் உத்சவமான பிப்., 3ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் 13ம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் இரவு, மாவடி சேவை உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், மயிலாப்பூர் கற்பகாம்பிகை அலங்காரத்தில் பட்டுவதனாம்பிகையும், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய பிரம்மபுரீஸ்வரரும் முக்கிய வீதி வழியாக உலா வந்தனர். நேற்று காலை திருமுறை திருவிழாவுடன், பெருநகரில், 14 நாட்களாக நடந்து வந்த தைப்பூச பெருவிழா நிறைவு பெற்றது.