4 ஆண்டுக்குப் பின் ஆக்கிரமிப்பு அகற்றம்: ராமேஸ்வரம் கோயில் வீதி பளீச்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2026 05:02
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் என உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இடையூறாக கோயில் நான்கு ரதவீதி, சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரை சாலை இருபுறமும் 2022ல் துவங்கிய ஆக்கிரமிப்பு தற்போது 150க்கு மேலான கடைகளால் ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துடன் ரதவீதியில் நடந்து சென்றும், சில சமயம் ஆக்கிரமிப்பு கடைகளால் இடறி விழுந்தும் அவதிப்பட்டனர். 4 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் முன்வராததால், ஆக்கிரமிப்பாளர்களின் அட்டகாசம் அதிகரித்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் எழுப்பினர். இதனையடுத்து நேற்று போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றி வியாபாரிகளை எச்சரித்தனர். 4 ஆண்டுக்குப் பின் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் கோயில் நான்கு ரதவீதி பளீச் என காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் எவ்வித சிரமம் இன்றி புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதேபோல் நான்கு ரதவீதி நீடிக்க, மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் தலைதூக்காதபடி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.