வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் கடைகளில் விதிகளை மீறி பிளாஸ்டிக் கவர்கள்
பதிவு செய்த நாள்
07
பிப் 2026 05:02
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களிடம் பிளாஸ்டிக் கொண்டு செல்வதை தடுக்க சோதனை நடத்தி அனுமதித்து வரும் நிலையில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் வளாகத்தில் செயல்பட்டு வரும் கடைகளில், விதிகளை மீறி பிளாஸ்டிக் கவர்களில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் வீற்றிருக்கும் ஈசனை, பக்தர்கள் தரிசிக்க ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை, வனத்துறையினர் அனுமதியளித்து வருகின்றனர். இந்தாண்டு மலை ஏறுவதற்கு, கடந்த, 1ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை மலை மீது கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், மலைப்பாதையின் துவக்கத்தில் உள்ள படிக்கட்டுப் பாதையில், வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்து, பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்த பின்பே அவர்களை மலையேற அனுமதித்து வருகின்றனர். இருப்பினும், சில பக்தர்கள், பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை கொண்டு சென்று, வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுகின்றனர். இந்நிலையில், விதிகளை மீறி, கோவில் வளாகத்தில் உள்ள ஏல கடைகளில், பிளாஸ்டிக் கவர்களில் உள்ள பொருட்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. அரசியல் பின்புலத்தை பயன்படுத்துவதால், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறுகையில்,"கடந்த காலங்களில் மலையேறிய பக்தர்கள் கொண்டு சென்ற பிளாஸ்டிக் கழிவுகள், வனப்பகுதியில் அதிகளவு இருந்தது. இதனால், வனவிலங்குகளுக்கும், வனத்திற்கும் தீங்கு ஏற்படும் என்பதால், வனத்துறையினருடன் இணைந்து, வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு இயக்கத்தினர், கடந்த, 6 மாதங்களுக்கு மேலாக மலைமேல் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார், 21 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளனர். வனத்துறையினரும், மலையேறும் பக்தர்களிடம் சோதனை செய்து, பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, மக்கும் பேப்பர் பைகளை கொடுத்து வருகின்றனர். ஆனால், கோவில் வளாகத்தில் உள்ள கோவில் மூலம் ஏலம் விடப்பட்ட கடைகளில், விதிமுறைகளை மீறி, பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். மலையேறும் பக்தர்கள், இந்தக் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கி, அதனை மலை மீது கொண்டு செல்வதால், வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. வனப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டது என்ற விதிமீறலை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இந்த கடைகளில், ஒரு கடையின் உரிமையாளர், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக உள்ளதால், அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்கின்றார். அறங்காவலர் குழு உறுப்பினராக உள்ளவர்கள், கோவிலில் எந்த குத்தகையும் எடுக்கக்கூடாது என்ற விதியும் மீறப்பட்டுள்ளது. வனப்பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு செல்லாமல் தடுக்க ஒரு புறம் போராடும் நிலையில், மறுபுறம் விதிகளை மீறி, கோவில் வளாகத்திலேயே பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, விதிமீறல்களை தடுத்து, வனத்தை பாதுகாக்க வேண்டும்,"என்றனர். இதுகுறித்து வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் செயல்அலுவலர் சக்திவேலிடம் கேட்டபோது,"இதுகுறித்து சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் விளக்கமளிக்கவில்லை,"என்றார்.
|