திருப்பரங்குன்றம் கோயிலில் மகா சிவராத்திரி விழா காப்புக்கட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2026 11:02
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி, பாரிவேட்டை திருவிழாவிற்கான முகூர்த்தகால் நடப்பட்டு சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது.
நேற்று காலையில் அபிஷேகம், பூஜை முடிந்து மூலவர்கள் அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரமானது. பின்பு மூலவர்கள் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. நந்தி மண்டபத்தின் மேல் தர்ப்பைப்புல் கட்டி மாலை அணிவித்து, காப்பு கட்டப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்பு பூசாரிகளுக்கு காப்பு கட்டப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சுவாமி, திருக்குளம் அருகேயுள்ள முனியாண்டி சுவாமிக்கு பூஜை நடந்தது. திருவிழா நடைபெறும் 12 நாட்களிலும் தினம் பூஜை நடக்கும். பிப். 13ல் கப்பரை பூஜையும், பிப். 15ல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன், குருநாதசுவாமி கோயிலுக்கு புறப்பாடாகி அங்கு ஒரு வாரம் பூஜை, பாரிவேட்டை, பூப்பல்லக்கு முடிந்து அம்மன் மீண்டும் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்படுவார். கோயில் பூசாரிகள் பூஜை ஏற்பாடுகள் செய்கின்றனர்.