பெரிய கோவில் கல்வெட்டு படிகள் சேதம் மீண்டும் நகலெடுக்கும் தொல்லியல் துறை
பதிவு செய்த நாள்
10
பிப் 2026 10:02
மைசூரு கல்வெட்டியல் பிரிவு அலுவலகத்தில் இருந்த, தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு மைப்படிகள் சேதம் அடைந்ததால், மீண்டும் நகலெடுக்கும் பணியில், மத்திய தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவு அலுவலகம், கர்நாடக மாநிலம், மைசூரில் இயங்குகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நகலெடுக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு மைப்படிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவு அலுவலகமான மைசூரு அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மைப்படிகளை, ‘டிஜிட்டல் ஸ்கேன்’ செய்து, அவற்றை இணையதளத்தில் பதிவேற்றவும், அவற்றில் உள்ள பழைய எழுத்துகளை தற்போதுள்ள எழுத்துகளாக மாற்றி பதிவேற்றவும், ‘பாரத் ஸ்ரீ’ திட்டத்தை, மத்திய கலாசாரத் துறை துவக்கி உள்ளது. இதற்காக, நவீன ‘ஸ்கேனர்’கள் வாங்கப்பட்டு, ஸ்கேன் செய்யும் நடைமுறைகள் துவங்கி உள்ளன. இந்நிலையில், அங்கு பாதுகாக்கப்பட்டு வந்த மைப்படிகள், கடந்த 1800களில் நகலெடுக்கப்பட்டவை என்பதால், மடித்து வைக்கப்பட்டிருந்த மைப்படி காகிதங்களில் பல இற்றும், மை அழிந்தும் விட்டதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு கடந்த, 1888ல் நகலெடுக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றின் பல பகுதிகள் சிதைந்தும், எழுத்துகள் மறைந்தும் போய் விட்டதாக கூறப்படுகிறது. பல கல்வெட்டு மைப்படிகள் மாயமானதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மைசூரு கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம், சேதமடைந்ததாக கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகளின் தற்போதைய நிலையை அறிந்து, அவற்றை மீண்டும் நகலெடுக்கும்படி, அந்தந்த மாநில கல்வெட்டியல் பிரிவு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுகளை, கல்வெட்டியலாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர், கடந்த சில நாட்களாக நகலெடுத்து வருகின்றனர். இதுகுறித்து, கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறியதாவது: பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட காகித மைப்படிகள் சேதமடைந்துள்ளதால், மீண்டும் நகலெடுக்கும் வகையில், ஆந்திராவின் தக் ஷராமம், முகலிங்கம், ஸ்ரீகுர்மம், விஜயவாடா, நெல்லுார், குண்டூர்; கர்நாடகாவின் ஹசன், ஹம்பி. தமிழகத்தின் தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை, திருப்பூர், திருச்சி, காஞ்சிபுரம், மாமல்லபுரம், தாராபுரம், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் நகலெடுக்கும் பணியில், மத்திய தொல்லியல் துறை கல்வெட்டியல் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். – நமது நிருபர் –
|