பதிவு செய்த நாள்
10
பிப்
2026
12:02
காந்தாரா மூலம் துளு நாட்டின் தெய்வ வழிபாடும், தெய்வங்களும் உலக அளவில் பிரபலமடைந்தன. கர்நாடகாவின் கடலோர பகுதியே துளுநாடு என, அழைக்கப்படுகிறது. இங்கு வசிக்கக்கூடிய மக்கள், துளு மொழி பேசக்கூடியவர்கள். மேலும், அதீத தெய்வ நம்பிக்கை உடையவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுவர். இவர்களின் தெய்வ வழிபாடு தனித்துவமானது.
இங்கு தெய்வம், கோவில்களில் இருப்பது ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் அடர்ந்த காடுகளில் எல்லை சாமிகளாக தெய்வங்கள் உள்ளன. இங்கு பஞ்சுருளி, குளிகா, கொரகாஜ்ஜா போன்றவை முக்கிய தெய்வங்களாக வழிபடப்படுகின்றன.
நம்பிக்கை கோவிலுக்கு சென்று கடவுளிடம் வரம் கேட்கலாம்; ஆனால், தெய்வங்களிடம் பொய் கூற முடியாது என்பது நம்பிக்கை. சிவபெருமானின் மறுஉருவமாக வணங்கப்படும் பஞ்சுருளி கருணையின் வடிவம், விவசாயத்தை காப்பதாகவும் நம்பப்படுகிறது.
எல்லையை காக்கும் வீரம் பொருந்திய தெய்வமான குளிகா, தீய சக்திகளை வேரறுப்பதில் வல்லவர். இத்தெய்வங்கள், ‘பூத கோலா’ என்ற சடங்கின் போது நேரில் வந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். இந்த துளு ஆன்மிக வழிபாட்டின் ஆழமான தத்துவம் என்னவென்றால், தெய்வம் என்பது எங்கோ துாரத்தில் இல்லை; அது நம்மை சுற்றியுள்ள இயற்கையை சார்ந்தே இருக்கிறது என்பதே.
வழிபாட்டு முறை மரத்தடியில் சிறிய கற்களை வைத்து தெய்வ வழிபாடு செய்யப்படும். இங்கு மந்திரங்களை விட, உண்மையான பக்தியும், துாய்மையான மனமுமே, தெய்வங்களை மகிழ்விக்கும் வழிகள். தர்மத்தைக் காப்பவனை, தர்மம் எப்போதும் காக்கும். இக்கட்டான சூழலில் இருப்பவர்கள் இத்தெய்வங்களை மனதார வேண்டினால், அவை நிழலாய் வந்து காக்கும் என்பது நம்பிக்கை.
துளு நாட்டில் தெய்வ வழிபாடு என்பது வெறும் ஆன்மிகம் மட்டுமல்ல. மாறாக கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை பிரதிபலிப்பதாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இங்குள்ள தெய்வங்களை யாராவது பழித்தால், அ வர்களுக்கு தக்க தண்டனை நிச்சயம் கிடைக்கும்.