கூம்பாச்சி அம்மன் கோவில் ரோடு சேதம்; ராஜகோபுரம் கட்டுவதில் சிரமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2026 10:02
இளையான்குடி; இளையான்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தில் உள்ள கூம்பாச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் ராஜகோபுர பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இளையான்குடி அருகே உள்ள வளையனேந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூம்பாச்சி அம்மன் கோயில் உள்ளது. வளையனேந்தல்,அரியாண்டிபுரம்,தெற்கு கீரனூர், வடக்கு கீரனூர், கருஞ்சுத்தி, கல்வெளிபொட்டல்,புலியூர் ,தரிகொம்பன் கரும்புகூட்டம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இக்கோயில் குலதெய்வ கோயிலாக விளங்கி வருகிறது. மேலும் அருகில் வேட்டாருடைய அய்யனார் கோயிலும் உள்ளது. இக்கோவில்களுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். வளையனேந்தல்,தெற்கு கீரனூர் செல்லும் ரோட்டிலிருந்து இக்கோயிலுக்கு பிரிந்து செல்லும் ரோடு மிகவும் மோசமான நிலையில் பக்தர்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. தற்போது இக்கோயிலில் புதிதாக ராஜகோபுரம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிற நிலையில் கோயிலுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் மற்றும் கனரக வாகனங்கள் வந்து செல்ல முடியாமல் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் பக்தர்கள் மிகுந்த மன வேதனைக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் கிராம மக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி உடனடியாக இந்த ரோட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.