சிவராத்திரி, எலுமிச்சை, பூஜை பொருட்கள் விலை கிடு கிடு உயர்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2026 01:02
திருப்புவனம்; சிவராத்திரியை முன்னிட்டு எலுமிச்சை பழம் மற்றும் பூஜை பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் இன்று சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ளது. சிவராத்திரி திருவிழாவின் போது தேங்காய், வாழைப்பழம், பூ மாலைகள் ஆகியவற்றின் விலை உயர்வது வழக்கம், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக எலுமிச்சம்பழத்தின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. மதுரை மார்கெட்டில் 35 கிலோ எடை கொண்ட ஒரு மூடை எலுமிச்சம்பழம் ஜனவரி மாதம் வரை இரண்டாரயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரு நாட்களாக 3800 முதல் 4200 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனையில் சிறிய சைஸ் பழங்கள் ஐந்து ரூபாய் என்றும் சற்று பெரிய சைஸ் பழங்கள் எட்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது. தென் மாவட்டங்களில் மதுரை பேரையூர், தேனி வருசநாடு மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் எலுமிச்சம்பழம் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இந்தாண்டு மழை குறைவு காரணமாக எலுமிச்சம்பழம் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.
சிவாரத்திரி திருவிழாவில் எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம், இதன் காரணமாகவும் விலை உயர்ந்துள்ளது. பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு எலுமிச்சம்பழ மாலை அணிவித்து வழிபடுவார்கள், விலை உயர்வு காரணமாக எலுமிச்சை மாலை விலையும் அதிகரித்துள்ளது. விரைவில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் எலுமிச்சம்பழத்தின் தேவை அதிகரிக்கும், வரத்து குறைவு காரணமாக எலுமிச்சை விலை இன்னமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புண்டு.