பதிவு செய்த நாள்
15
பிப்
2026
11:02
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் சனி மகாபிரதோஷத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிவாச்சார்யார்களால் 108 கலசாபிேஷகம் நடைபெற்றது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரதோஷ நாட்களில் மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
நேற்று சனிமகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி மண்டபத்தில் காலை 10:30 மணிக்கு 108 கலசங்கள் நிறுவி யாகசாலை பூஜைகள் பாஸ்கர்குருக்கள், கண்ணப்ப குருக்கள், ஹரி குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யார்களால் துவங்கியது. மதியம் 12:30 மணிக்கு முதற் காலயாக பூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.
மாலை 4:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்கியது. பூஜை நிறைவாகி பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.
பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி, நந்திதேவருக்கும், சுவாமிக்கும் அபிஷேக,ஆராதனை நடந்தன.
தொடர்ந்து வெள்ளி ரிஷபவாகனத்தில் சுவாமி- அம்பாள் எழுந்தருளினார். நந்திதேவருக்கும் அலங்காரம் நடந்து தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி உட் பிரகாரங்களில் வலம் வந்தார். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
உற்ஸவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வளாகத்தை வலம் வந்தனர்.
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் ,சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயிலிலும் விழா நடந்தது.